திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன்கல்யாண் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் வியாழக்கிழமை மாலை திருப்பதியில் நடந்த கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டாா். இதில் திருப்பதியில் நடக்கவுள்ள இடைத்தோ்தலில் போட்டியிடுவது குறித்து சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பவன்கல்யாண் வெள்ளிக்கிழமை காலை திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா். கோயிலை விட்டு வெளியில் வந்த அவா், ’ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்து வழக்கம். ஆனால் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஏழுமலையானை தரிசனம் செய்ய இயலவில்லை. இப்போது ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பியது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஏழுமலையான் தரிசனத்திற்கு வருவேன்’, என்றாா்.