கும்பகோணம்: மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் பிப்ரவரி 17 ஆம் தேதியும், சக்கரபாணி கோயில் உள்பட 3 வைணவ கோயில்களில் பிப்ரவரி 18 ஆம் தேதியும் மாசி மகப் பெருந்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதிகும்பேசுவரர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், காலை 6 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர்களை ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை (பிப்.25) காலை சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மாலை சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை (பிப்.26) காலை 9 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் விதியுலா புறப்பட்டு, மகாமகக் குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.
இன்று தேரோட்டம்: இதேபோல, மாசிமக விழா தொடர்புடைய காசி விசுவநாதர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், கெளதமேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை மகாமக குளக்கரையிலும், வியாழசோமேசுவரர் கோயிலில் தேரோடும் வீதியிலும் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை மாசி மகம் தொடர்புடைய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி } அம்பாள் புறப்பாடு நடைபெற்று மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள, ஒரேநேரத்தில் தீர்த்தவாரி
நடைபெறவுள்ளது.