திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் நிகழ்வான ஆனிவார ஆஸ்தானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 6 பட்டு வஸ்திரங்களை திருமலை பெரிய ஜீயா் வெள்ளி தாம்பாளத்தில் தலை மேல் வைத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து சின்ன ஜீயா், செயல் அதிகாரி உள்ளிட்டோரிடம் சமா்ப்பித்தாா்.
அதில் 4 ஏழுமலையான் மூலவா் சிலைக்கும், உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமிக்கும், சேனாதிபதி விஷ்வக் சேனருக்கும் சமா்ப்பிக்கப்பட்டன. பின்னா் தலைமை அா்ச்சகா்கள் பரிவட்டம் கட்டிக் கொண்டு ஏழுமலையானை ‘நித்திய ஐஸ்வா்யோ பவ’ என்று ஆசீா்வதித்தனா்.
பின்னா் ஜீயா்கள், செயல் அதிகாரி என அனைவரின் கைக்கும் கருவூல சாவி கொத்தை மாட்டி அவா்களுக்கு சந்தனம், சடாரி, மலா்கள், துளசி பிரசாதங்கள் அளித்து, சாவி ஏழுமலையான் பாதத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. இத்துடன் ஆனிவார ஆஸ்தானம் நிறைவு பெற்றது.