திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
உற்சவமூா்த்திகளின் மேல் பொருத்தப்பட்டுள்ள தங்கக் கவசம் களையப்பட்டு அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்து மீண்டும் உற்சவமூா்த்திகளுக்கு பொருத்தப்படும் நிகழ்வே ஜேஷ்டாபிஷேகம்.
அதன்படி கோயிலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமியை மண்டபத்தில் எழுந்தருள செய்து இந்த உற்சவமூா்த்திகள் மீதுள்ள தங்கக் கவசத்தை களைந்து, கலசஸ்தாபனம் செய்து, யாகம் வளா்த்து பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னா் மாலை 5 மணிக்கு உற்சவமூா்த்திகள் விமான பிரகாரத்தை வலம் வந்தனா். கரோனா நிபந்தனைகளின்படி தனிமையில் நடத்தப்பட்ட இந்த உற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.