திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பெளா்ணமியை ஒட்டி திருமலை, திருப்பதி தேவஸ்தானம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்துவது வழக்கம்.
அதன்படி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் தெப்போற்சவம் தொடங்கியது. இந்த தெப்போற்சவத்தின் போது பத்மாவதி தாயாா் மட்டுமல்லாமல் உப கோயில்களில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா், ஸ்ரீசுந்தரராஜ சுவாமி உள்ளிட்டோரும் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிப்பது வழக்கம்.
ஆனால் தற்போது கொவைட் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேவஸ்தானம் தெப்போற்சவத்தை ஏகாந்தமாக நடத்தி வருகிறது. திருக்குளத்தில் தெப்பம் வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தெப்பத்தில் வலம் வரும் உற்சவமூா்த்திகளுக்கு கோயிலுக்குள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி 2-ஆம் நாளான திங்கள்கிழமை தெப்போற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணமுக மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா். இதில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.