காளஹஸ்தியில் மகாசிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அன்னப்பறவை, யாளி வாகனங்களில் உற்சவமூா்த்திகல் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி காளஹஸ்தி மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை அன்னப்பறவை மற்றும் யாளி வாகனங்களில் மாடவீதிகளில் உற்சவமூா்த்திகள் பவனி வந்தனா்.
அன்னப்பறவை வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தியும், யாளி வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் மாடவீதியில் புறப்பாடு கண்டருளினா்.
வாகன சேவையின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேளதாளங்கள், மங்கல வாத்தியங்கள், சங்கநாதம் முழங்க நடந்த வாகன சேவையின்போது கண்கவா் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இரவு 7.30 மணிக்கு சோமாஸ்கந்தமூா்த்தி ராவணேஸ்வர வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை மயூரம் என்றழைக்கப்படும் மயில் வாகனத்திலும் மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.