திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் பங்கேற்பின்றி விநாயகர் சதுர்த்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்கயிலாயம் எனப்படும் இக்கோயிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையேறிச் செல்லும் வழியில் தாயுமான சுவாமியும், மலை மீது உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தலா 75 கிலோ வீதம் 150 கிலோவில் 2 மெகா கொழுக்கட்டைகள் தயாரித்துப் படைக்கப்படுவது வழக்கம்.
ஆரவாரமின்றி நடைபெற்ற விழா: ஆனால், கரோனாவால் பக்தர்கள் பங்கேற்பில்லாததால் மாணிக்க விநாயகருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 30 கிலோ எடையில் கொழுக்கட்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
வழக்கம்போல் சன்னதிகள் மலர்கள், மாவிலைத் தோரணம், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. உற்சவர், மூலவருக்கு அபிஷேக ஆராதனை, நைவேத்தியப் படையலிட்டு சதுர்த்தி பூஜை நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு: வழிபட அனுமதியில்லை எனத் தெரிந்தும் பெரும்பாலான பக்தர்கள் கோயில் வாசல் முன் வெள்ளிக்கிழமை காலை முதலே குவியத் தொடங்கினர். சிலர் கோயிலுக்குள் அனுமதிக்கக் கோரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தடுக்கும் வகையில் போலீஸார் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பக்தர்கள் கோயில் வாசலில் நின்றவாறு ஏமாற்றத்துடன் வழிபட்டுச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் விஜயராணி கூறுகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால், கோயிலில் நாள்தோறும் அனைத்து பூஜைகளும் நடத்தப்படுகின்றன என்றார்.