குருப் பெயர்ச்சி பலன்கள் 2022: கும்பம்

கும்பம் ராசிக்கு 2022-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
குருப் பெயர்ச்சி பலன்கள் 2022: கும்பம்

கும்பம் ராசிக்கு 2022-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கும்ப ராசி அன்பர்களே நீங்கள் தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடையவர்கள். எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டீர்கள். நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள்.

13-04-2022 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை ரண ருண ரோக  - அஷ்டம  - தொழில்  ஸ்தானங்களின் மீது விழுகிறது.

இந்த குரு பெயர்ச்சியில் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ ஏண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உங்களின் தேவைகளுக்கு வாழ்க்கைத்துணையின் உதவி நிச்சயம் உண்டு. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர் அதிகாரிகளாலும் இடப்படும் கட்டளைகளை  கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள்.

இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  அதனால்  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தன்னைத்தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். திட்டமிட்டபடி  பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.

பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

அவிட்டம் 3, 4 பாதம்

இந்த ஆண்டு பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

சதயம்

இந்த ஆண்டு எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்

இந்த ஆண்டு உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். 

சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: மேற்கு - வடகிழக்கு - தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் கம் கணபதயே நம என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com