விருச்சிக ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2022

விருச்சிக ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 
விருச்சிக ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2022

விருச்சிக ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!

கிரகநிலை

சனி பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் - குரு பகவான் சுக ஸ்தானத்திலும் - ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் - கேது பகவான் விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.      

இந்த பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருக்கும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார் - உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பொருளாதார நிலை

பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுகொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார்-உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும் சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.

கொடுக்கல் - வாங்கல்

பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். அரசு வழியிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச்செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.

அரசியல்

மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரிவர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படமுடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார்-உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

கலைஞர்கள்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.

மாணவ - மாணவியர்

கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விசாகம் 4ம் பாதம்

மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். 

அனுஷம்

தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். 

கேட்டை

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும்.  அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும். 
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com