திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில், பக்தவத்சலேஸ்வரர் தாழக் கோயிலில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் உள்ளது.
பட்சி தீர்த்தம் கழுதொழும் சிவனாக வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின் 7ஆம் நாள் உற்சவமாக பஞ்சரத தேரோட்ட தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
விழாவையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து விநாயகர் தேர், முருகர் வள்ளி தெய்வானை, சண்டேஸ்வரர், அம்பாள், சுவாமி என உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஊர்வலம் வந்தனர்.
தேர்த் திருவிழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் ஆன்மிக பக்தர்களுக்கு அன்னதானங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர்.
தேர்த் திருவிழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி செயல் அலுவலர் லதா, பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.