திருச்செந்தூரில் திடீரென கடல் 50 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனைத் தரிசித்து விட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூரில் இன்று திடீரென 50 அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கியுள்ளது. முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் கடல் உள்வாங்கிய காட்சியை தனது மொபைல் போனில் புகைப்படங்களாக எடுத்துச் சென்றனர்.
கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து வந்தனர். இதையடுத்து, பக்தர்கள் கடற்கரைக்கு அருகே செல்ல வேண்டாம் என்றும், கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.