இன்று பரவலாக பேசப்படுபவர் கவிதா நாயர். முந்தானை முடிச்சுக்கு முன்பும் சரி ..பின்பும் சரி..! இங்கு நான் பிரஸ்தாபித்து வந்திருப்பது சாட்சாத் 'முந்தானை முடிச்சு' ஹீரோயின் ஊர்வசியை பற்றித்தான்.
பத்துப்படங்களுக்கு பிறகு ரேட்டும், லகரத்தை தாண்டி விட்ட பிறகு கிடைக்க வேண்டிய சம்பளத்தையும் முதல் படமான 'முந்தானை முடிச்சில்' நுழைவாயிலிலயே பெற்று விட்ட புண்ணியவதி இவர்.
'முந்தானை முடிச்சு' ஹீரோயினாக அவர் தேர்வு செய்யப்பட்டது பற்றிக் கேட்ட பொழுது:
ஏவிம்மில் இருந்து ஆள் வந்திருந்த பொழுது நான் வீட்டில் இல்லை. 'தொடரும் உறவு' ஷூட்டிங்குக்கு போயிருந்தேன். வந்தவர்கள் அம்மாவிடம் தங்களைப் பற்றித் தெரிவித்து விட்டு, இரண்டு மணி நேரத்தில் திருப்பித் தந்து விடுவதாக என்னுடைய பட ஆல்பத்தை வாங்கி போயிருக்கிறார்கள். பிறகுஅவர்கள் ஆல்பத்தை திருப்பிக் கொடுக்க வந்த பொழுது டைரக்டர் பாக்கியராஜ் நேரில் பார்க்க விரும்புவதாகவும்,மறுநாள் காலையில் வர முடியுமா என்றும் கேட்டார்கள்.நாங்கள் சம்மதித்தோம். மறுநாள் நான், அம்மா, சித்தப்பா ஆகிய மூவரும் ஏவிஎம் சென்றோம். டைரக்டர் பாக்கியராஜ் அங்கு இருந்தார். ஒரு டயலாக் ஷீட்டை குடுத்து பேசிக்காட்டச் சொன்னார்.
பிறகு ஸ்டில் எடுத்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து அழைப்பு வந்தது. போனோம். ஏவிஎம் கார்டனிலேயே எனக்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. படமாக்கின காட்சிகளை மறுநாளே ரஷ் போட்டுப் பார்த்தாங்க. செலக்டட் என்று சொல்லிட்டாங்க. லம்ப்பா 60 நாள் கால்ஷீட்டும் வாங்கிக்கிட்டாங்க.
நீங்கள் முதன் முதலாக எந்த காட்சியில்நடித்தீர்கள் ?
பர்ஸ்ட் டே ஷூட்டிங் பவானியில்நடந்தது. முதலில மூவ்மென்ட்ஸ்ட்தான் எடுத்தாங்க. சீன்னு பார்த்தா படத்தில வேஷ்டியை எடுத்துக் கொண்டு போவேனே, அந்தச் சீன்தான் எடுத்தாங்க.
நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?
ட்ரஸ்ட்புரம் ஸ்கூலில் நயன்த் படிச்சுக்கிட்டு இருந்தேன். முந்தானை முடிச்சில் நடிக்காமல் இருந்தால் டென்த் போயிருப்பேன்.
முந்தானை முடிச்சு படப்பிடிப்பில் நீங்கள் சரிவர ஓத்துழைப்பு தரவில்லை என்று செய்திகள் கடுமையாக வந்து கொண்டிருந்தனவே?
இன்னும் பல மாதிரியான செய்திகள். நான் ஷூட்டிங் போன ஒரு வாரத்தில் தலைகால் தெரியாமல் குதிக்கிறேன் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டது. நான் மிகவும் வேதனைப்பட்டேன். ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் ஏவிஎம்மின் இன்னொரு படத்துக்கு புக் ஆகியிருப்பேனா?
டைரக்டர் பாக்யராஜுக்கும் உங்களுக்கும் சரியான 'அண்டர்ஸ்டாண்டிங்' இல்லையென்று கூறப்பட்டதே?
அவர் என்னை அடித்து விட்டார் என்று கூட இங்கே சொல்கிறார்கள். அவரே எல்லா சீன்களிலும் நடித்துக் காட்டி விடுவதால் சிரமம் எனக்கு ஏற்படுவதில்லை. சில காட்சிகளில் டயலாக்கில் சரியான மாடுலேசன் இல்லை என்று என்னைத் திட்டியிருக்கிறார். டைரக்டர் என்ற முறையில் அது நியாயம்தானே? அவர் என்னை கடிந்திருந்தால் அது கூட என் முன்னேற்றத்திற்குத்தான்.
பேட்டி:இ.மருதம்
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.83 இதழ்)