மரணித்த பொழுதில்
பாரதியின் இறுதிப் பயணத்தில்
உடன் வந்த மக்கள் அன்று உணரவில்லை
மகா கவியின் சரிவில்
ஒரு சரித்திரமே சரிந்ததென
அவன் புதையுண்ட மண்
அதை அறிந்திருந்ததால்
கல்லறைப் பூக்களில் சிதறிய
சில்லறைத் துளிகளாய் கண்ணீர் சிந்தி-அவன்
விட்டுச் சென்ற பக்கங்களின்
வீரியம் உரைத்தது
வாழ்ந்த காலத்திலும் அவர் அருமை
அறிந்ததில்லை எவரும்
வீழ்ந்த காலத்திலும் அவர் பெருமை
விளங்கியதில்லை எவரும்
கல்லார் அறிவிலாதார் என்ற
வள்ளுவன் வாக்கைப் பொய்யாக்கிய மேதை
ஆயிரம் கோடிகளே அற்பமான இந்நாளில்
மண்ணையும் மக்களையும் நேசித்த நேர்மையாளன்
தாய்க்கு ஒரு தொலைபேசி தரக் கூடத் தயங்கிய
தன்னலமற்ற பெருந்தலைவன்
அவன் வீழ்ந்த மண்ணின் கல்லறைப் பூக்கள்
உதிர்த்த உதிரத் துளிகள்
போராடித் துயரத்தோடு
வேரோடின அவனைத் தேடி
ஒரு படகோட்டிய பாமரனின்
குடிசை வார்த்த
பாரத ரத்தினம்
அணுவிற்குள் நுழைந்த அளப்பரிய ஆற்றல்
ஏவுகணை தொழில்நுட்பத்தின்
இணையற்ற பிதாமகன்
கனவை விதைத்து லட்சியத்தை அறுவடை செய்ய
மாணவர் தேசம் நோக்கி பயணித்த ஆசிரியன்
பேய்க்கரும்பு கல்லறையில்
பேரமைதியாய் கண்ணுறங்க
கல்லறை முளைத்த அவன் கனவுப்பூக்கள்
கண்ணீர் தூவியது அவன் கனவு நனவாக
கல்லறை என்பது பூக்களின் கருவறை-அதில்
கருத்தரித்த பூக்கள் கலங்குவதில்லை-அது
தானே கண்ணீர் சிந்த காரணமாகுங்கள்
தன்னலமற்று இருங்கள்
மாண்ட பின்னும் உயிர்த்தெழுங்கள்
மனித நேயத்தால் துளிர்த்திடுங்கள்