பண்பாடு நாகரிகம் பிறப்ப தற்குப்
பண்டையநாள் பாய்ந்திட்ட ஆறெல் லாமே
தண்நிலவும் கதிர்பொழியும் ஒளியைப் போலத்
தரையிலின்றும் வளம்தன்னைக் கூட்டும் போது
மண்மீதில் முதல்பிறந்த தமிழ தத்தை
மணக்கவைத்த காவிரியை வற்ற வைத்தார்
கண்முன்னே பாய்ந்தபோதும் கன்ன டத்தார்
கால்வெட்டி அணைகளுக்குள் முடக்கி வைத்தார் !
முப்போகம் விளைந்திட்ட தஞ்சை மண்ணோ
முளைவிடவும் முடியாமல் தவிக்கு தின்று
எப்போதும் நீர்பாய்ந்த வயல்க ளெல்லாம்
எடுத்துரைக்கப் பாலைவன மான தின்று
செப்புமாறு உயர்ந்திருந்த விவசா யெல்லாம்
செத்துசெத்து விழுகின்றார் வறுமை யாலே
அப்பழுக்கே இல்லாமல் பாய்ந்த பொன்னி
ஆறோடும் நீரோடும் கனவா யிற்று !
பழுதென்றே தமிழகத்தைத் தில்லி யாட்சி
பாராமல் ஒதுக்குகின்ற புறக்க ணிப்பால்
பொழுதெல்லாம் நீதிமன்றக் கதவைத் தட்டும்
போராட்டம் ஓயவில்லை நீரும் இல்லை
முழுதாகத் தமிழகந்தான் பாலை யாகி
முதுகுடிகள் பட்டினியில் சாவ தற்குள்
உழுவதற்கும் குடிப்பதற்கும் உரிய பங்கை
உரிமையுடன் பெறுவதற்கே எழுவோம் ஒன்றாய் !