இசைக்கருவி பலஉண்டு அதற்கெல்லாம் மகராணி... வீணையெனும் வாத்தியமே ஏந்திடுவாள் கலைவாணி !அசையாத மனம்கூட அசைத்திடுமே அதன்நாதம் ! இனியஒலி யாவைக்கும் அதன்ஒலியே உவமானம் !கடலோர மண்ணுக்கு பாய்ந்துவரும் அலையோசை... காதல்மதி கொண்டோர்க்கு கன்னியளின் வளையோசை...மடல்பூக்கும் மலருக்கு தென்றல்தரும் முத்தஒலி... நடமாடும் மயிலுக்கு மழைஇடியின் சத்தஒலி...அன்பான அன்னைக்கு தன்பிள்ளை மொழிமழலை... கவிபாடித் திரிவோர்க்கு செந்தமிழின் வார்த்தையலை...ஒன்றாகச் சேர்ந்தோர்க்கு ஆனந்த சிரிப்பொலியாம்.. இறைதேடும் பக்தர்க்கு ஆலயத்தின் மணியொலியாம் !இருக்கின்ற நிலைபொருத்து கேட்கின்ற ஓசையது.. இனிதெனவே ஆகிடுமே...வீணையதன் நாதமென...நறுக்கென்று எந்நாளும் நன்மொழியே பேசிடுவோம்..! நாதமென அம்மொழிகள் ரீங்காரம் செய்திடுமே !