வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போர் அவுணன்தன்னை சுழித்துஎங்கும்
தாழ்வுஇடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தான்உகள
வாழ்வுஅடங்க மார்வுஇடந்த மால்.
நெஞ்சே,
போர்செய்யும் அசுரனனான இரணியனைத் தழுவிக்கொண்டு, அவனுடைய மார்பைப் பிளந்தான் எம்பெருமான், அப்போது அந்த இரணியனுடைய ரத்தமானது வெள்ளம்போல் எங்கும் சுழித்துக்கொண்டு ஓடியது, தாழ்வான இடங்களில் பரவியது, இவ்வாறு அவனை வதம்செய்து அவனது வாழ்வை முடித்தான் பெருமான்,
நாம் அவனைநோக்கிச் செல்கிறோம், வழியில் நம்முடைய கொடிய வினைகள் நின்றுகொண்டு நம்மைத் தடுக்கின்றன, அந்த வினைகளை அவன் மாற்றமாட்டானா! (மாற்றுவான்).