பாடல் - 7
பூவைகள்போல் நிறத்தன், புண்டரீகங்கள்போலும்
கண்ணன்,
யாவையும் யாவருமாய் நின்ற மாயன், என்
ஆழிப்பிரான்,
மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம்
சொல்லிப்
பாவைகள், தீர்க்கிற்றிரே வினையாட்டியேன்
பாசு அறவே.
பாவைகளே, காயாம்பூவைப்போன்ற நிறம்கொண்டவன், தாமரைபோன்ற கண்களைக்கொண்டவன், அஃறிணைகள் அனைத்துமாக, உயர்திணைகள் அனைவருமாக நின்ற மாயன், சக்ராயுதம் ஏந்திநிற்கும் எம்பெருமான், குதிரைவடிவில் வந்த கேசியின் வலிமையான வாயைப் பிளந்த மதுசூதனன், இங்கே நான்சொல்லும் வார்த்தைகளை அவரிடம் சொல்லிவருவீர்களா? என்னுடைய துக்கத்தைத் தீர்ப்பீர்களா?
***
பாடல் - 8
பாசு அற எய்தி இன்னே வினையேன் எனை
ஊழி நைவேன்?
ஆசு அறு தூவி வெள்ளைக்குருகே, அருள்செய்து
ஒருநாள்
மாசு அறு நீலச்சுடர்முடி வானவர்கோனைக் கண்டு
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள்
பேர்த்து மற்றே.
குற்றமற்ற சிறகுகளையுடைய வெள்ளைக் குருகே, தீவினை செய்தவளான நான், எம்பெருமானை எண்ணி நிறமழிந்து வாடுகிறேன், இன்னும் எத்தனை ஊழிக்காலம் நான் இப்படி நைந்துகிடக்கவேண்டும்? எனக்கு அருள்செய்யுங்கள், எனக்காக எம்பெருமானிடம் செல்லுங்கள், குற்றமில்லாத நீலச்சுடர்த் திருமுடியைக்கொண்ட அந்த வானவர் தலைவனைக் காணுங்கள், ‘பெருமானே, குற்றமில்லாத நீங்கள்மட்டும்தான் இவளுக்கு ஒரே கதி, வேறு எதையும், யாரையும் இவள் பார்க்கக்கூட விரும்புவதில்லை’ என்று சொல்லுங்கள், எனக்கு அருள்புரியுமாறு அப்பெருமானிடம் கேளுங்கள்.