பாடல் 3
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன், அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூ உலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே.
பிரம்மன், சிவபெருமான், மற்ற தேவர்களெல்லாம் எம்பெருமானை நாடி வந்து, ‘உங்களையன்றி எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை’ என்று அழைக்கிறார்கள், அதைக் கேட்டு அப்பெருமான் பகைவர்களை வெல்கிறான், மூன்று உலகங்களையும் காத்து அருள்கிறான். அத்தகைய பெருமானுடைய திருமோகூரை இனி நாம் நன்றாக அணுகுவோம், நம்முடைய இடர்களெல்லாம் கெடும்.