பாடல் 8
திருமாலிருஞ்சோலை மலையே, திருப்பாற்கடலே, என் தலையே,
திருமால் வைகுந்தமே, தண் திருவேங்கடமே, எனது உடலே,
அரு மா மாயத்து எனது உயிரே, மனமே, வாக்கே, கருமமே,
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.
எம்பெருமான், என்னுடைய ஊழி முதல்வன் (ஊழிக்காலத்துக்கு முன்பு இருந்தவன், அனைத்துக்கும் முதலானவன்), தனித்துவமானவன், அத்தகைய பெருமான், திருமாலிருஞ்சோலை மலையையும் திருப்பாற்கடலையும், திருமாலின் வைகுந்தத்தையும், குளிர்ந்த திருவேங்கட மலையையும் பிரிவதில்லை, அதுபோல, அவன் என்னுடைய தலையை, உடலை, அரிய, பெரிய மாயமாகிய என் உயிரை, மனத்தை, சொற்களை, செயல்களையும் பிரிவதில்லை, ஒரு சிறிய நொடிப்பொழுதும் என்னைப் பிரியாமல் அருள்புரிகிறான்.