பாடல் 4
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்ப
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்,
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே.
எம்பெருமானின் திருவருள் கிடைக்க அரியது; அத்தகைய திருவருள் எனக்கு எளிதாகக் கிடைத்ததை எண்ணி, பெருமானைக் கண்டு என்னுடைய கண்கள் களிக்கின்றன, சிந்தையெல்லாம் அவருடைய பெருமை நிறைகிறது, நான் மகிழ்ச்சியில் திளைக்கிறேன், கிளிகள் தாவும் சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், தெளிவான, உயர்வான பரமபதத்தை எனக்குத் தருவான்.