பாடல் 3
என்னை முற்றும் உயிர் உண்டு, என் மாய ஆக்கை இதனுள் புக்கு,
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமாலிருஞ்சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திருவருளே?
எம்பெருமான் என்னுடைய உயிரை முழுவதுமாக உண்டான், மாயமாகிய இந்த உடலினுள் புகுந்தான், நான் என்பது முற்றிலும் தானே எனும்படி நின்றான், அத்தகைய அந்த மாய அம்மான் சேர்ந்திருக்கும் திருத்தலம், தென் திசையிலுள்ள சிறந்த திருமாலிருஞ்சோலை, அந்தத் திருமாலிருஞ்சோலை இருக்கும் திசையை நோக்கிக் கை கூப்புகிற நான், இதற்குமேலும் வேறு இடத்தைத் தேடிச் செல்வேனோ? எம்பெருமான் திருவருள் என்னவோ! நான் அறியேன்.