வஞ்சி மாநகர் - ரா. இராகவையங்கார்; பக்.144; ரூ. 80; செல்லப்பா பதிப்பகம், மதுரை -1; )0452-2345971
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவரான சேரர்களின் தலைநகர் வஞ்சி மாநகர். ஆனால் தமிழ்மொழிப் புலவர்களிடையேயும், சான்றோர்களிடையேயும் வஞ்சி மாநகர் என்பது கொங்கு நாட்டுக் கருவூரா அல்லது மேல் கடற்கரையில் அமைந்துள்ள கொடுங்காளூரா என காலங்காலமாக விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த ஐயப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக இந் நூல் படைக்கப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, நற்றிணை, புறநானூறு, களவழி நாற்பது என பல்வேறு பைந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து வஞ்சி மாநகர் என்பது கொங்கு மண்டலத்துக் கருவூரே என்ற தன் கருத்துக்கு வலுசேர்க்கிறார் நூலாசிரியர்.
1917-ல் படைக்கப்பட்டு ஏறக்குறைய நூறாண்டை நெருங்கிக் கொண்டிருந்தாலும் இந் நூலின் நடை இன்றும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும்வகையில் இருப்பது சிறப்பு. தமிழ் இலக்கியப் பாக்கள் நிறைந்த விறுவிறுப்பானதொரு வரலாற்றுப் புதினத்தைப் படித்ததுபோன்ற உணர்வைத் தருகிறது இந்நூல்.