பார்த்திபன் கனவு - அமரர் கல்கி; பக்.384; ரூ.75; நக்கீரன் வெளியீடு, சென்னை-14; )044- 4399 3029.
கவித்துவமான சொற்பெருக்கு, ஜீவநதியின் ஓட்டம் போன்ற சரளமான எழுத்து நடை. முற்போக்குச் சிந்தனை, தியாக உணர்வு என்று பன்முகக் கலவை அமரர் கல்கி. உயிரோட்டமான அவரது ஒவ்வொரு படைப்பும் இதற்குச் சாட்சி. சரித்திர பார்வையுடன் சமூக நோக்கும் கொண்ட பார்த்திபன் கனவு நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது. நரசிம்ம பல்லவன், குந்தவை, விக்கிரமன் பாத்திரங்கள் வரும் காட்சிகளின் விறுவிறுப்பு வாசகர்களை நூலை கீழே வைக்காது படிக்க வைக்கும். சோழமன்னர் பார்த்திபன் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளி வரை கதை மாந்தர்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீரியம் வெளிப்படுகிறது. ஆனால் அது பிரசாரம் போல் அமையாது கதை ஓட்டத்தின் ஊடாகச் சொல்லப்பட்டிருப்பது நேர்த்தி. பாராட்டத்தக்கது. நீண்ட நாவல்கள் இதழ்களில் வருவதும் அவற்றைப் படிப்பதும் அரிதாகி வரும் இந்நாளிலும் கல்கியின் சரித்திர நாவலை அது வெளியான காலத்திலிருந்தே அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் இப்போதும் படிக்கும் வாசகர்கள் இல்லாமல் இல்லை. காலத்தை வென்று நிற்கும் அத்தகைய அவரது படைப்புகளில் பார்த்திபன் கனவும் இடம் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.