கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ - இடைப்பாடி அமுதன்; பக்.304; ரூ.145; அனுராதா பதிப்பகம், இடைப்பாடி; )94873 23457.
1780 ஆம் ஆண்டு சென்னைக்கு ஒரு படை வீரராக இங்கிலாந்திலிருந்து வந்தவர் தாமஸ் மன்றோ. பின்பு அவர் கமாண்டராக, கலெக்டராக, கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் ஆளுகைக்குட்பட்ட சென்னை ராஜதானியின் அன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளைப் பற்றி லண்டனில் இருந்த அவருடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதினார். அவற்றில் உள்ள தகவல்கள் அவர் காலத்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகத் திகழ்கின்றன. தாமஸ் மன்றோவின் கடிதங்களின் அடிப்படையில் அன்றைய கொங்குநாட்டின் சமூகச் சூழ்நிலையை இந்நூலில் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
விவசாயிகளுக்கு நிலத்தை நேரடியாக அளித்து, அதற்கான வரியை அரசாங்கம் நேரடியாக வசூல் செய்யும் ரயத்துவாரி முறையை மன்றோ அறிமுகப்படுத்தினார். ஒருமுறை பெல்லாரி மாவட்டத்தில் ஆங்கிலேய துணைக் கலெக்டர் ஒருவர் விவசாயிகளை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, அப்போது கவர்னராக இருந்த மன்றோ, "மக்களை மதம் மாற்றும் முயற்சி மதகுருமார்கள் சார்ந்த விஷயம். அதிகாரி ஒருவர் மக்களைத் தன் அலுவலகத்தில் கூட்டி, மதப் பிரசாரம் செய்வது அதிகாரத் துஷ்பிரயோகம்' என்று தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அக்காலத்தில் நெசவாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் போக்க மன்றோ முயற்சி செய்திருக்கிறார். அதுபோல 1800-இலேயே சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்றும் மன்றோ திட்டமிட்டிருக்கிறார். பலரும் அறியாத இத்தகைய அரிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கொங்குநாட்டின் }குறிப்பாக சேலம் மாவட்டத்தின் } ஆங்கிலேயர் கால வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு பயன்படும் மிகச் சிறந்த நூல்.