குண்டலகேசி - இந்திரா பார்த்தசாரதி; பக்.192; ரூ.100; கவிதா வெளியீடு, சென்னை-17; 044- 2436 4243.
மூன்று குறுநாவல்கள் இணைந்த நூல் இது. இதில் முதல் குறுநாவல் குண்டலகேசி. நியாயத்துக்காகப் போராடும் கதாநாயகி, அவளுக்குத் துணை இருக்கும் அவளுடைய கல்லூரி முதல்வர் - மாணவிகள், மறுபக்கம் சமூக விரோதிகள். இதுதான் கதைக்களம்.
இந்தக் கதையில் தொடக்கம் முதல் இறுதிவரை பெண்ணுரிமை கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவை நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. சமூக மாற்றத்துக்கு மட்டுமல்லாமல், பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை அடித்தட்டு மக்களிடம் எப்படியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். சமுதாயச் சீரழிவைத் தடுப்பதற்குப் பெண்கள் குழுவாக இணைந்து போராடினால் கிடைக்கக் கூடிய வெற்றி போன்றவை, தக்க காரணங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மற்ற இரு குறுநாவல்கள் "ஊனம்', "கானல்நீர்' இவை இரண்டும் சமூகத்தின் பொதுவான குடும்பச் சூழல், பொருளாதாரப் பின்னணி, தனிமனித வாழ்க்கைமுறை, அவற்றில் நிகழும் நெருடல்கள் போன்றவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.
நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதியின் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் இந்த நூல், நமக்கும் அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
வாசகர் உலகில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்திரா பார்த்தசாரதியின் எண்ணற்ற சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் போல, இந்த நூலும் மிகுந்த
வரவேற்பைப் பெறும்.