செவ்வியல் இலக்கிய மணிமாலை - ம.சா.அறிவுடைநம்பி; பக்.320; ரூ.160; கருமணி பதிப்பகம், புதுச்சேரி-8; 0413-6542526.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள்; தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை.
இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்துள்ளன. "தமிழ் இலக்கியங்களில் இசைநிறைக் கிளவிகள்', "காப்பியங்களில் கனவுகள்' ஆகிய கட்டுரைகள் ஒரு முறைக்கு இருமுறை படித்துச் சுவைக்கலாம். அந்தந்த பக்கத்திலேயே அதற்கான அடிக்குறிப்புகளைத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் இளம் ஆய்வாளர்களுக்கான சிறந்த வழிகாட்டி நூல்.
"தமிழ் இலக்கியங்களில் மதுவிலக்கு' என்ற கட்டுரை 18.1.2009-இல் தினமணி "தமிழ்மணி'யில் வெளியாகி, பின் அதே கட்டுரை 21.7.2009-இல் தமிழ் ஓசை பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. இனிமேலும் இத்தவறு நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.