நலமறிய ஆவல்- பட்டுக்கோட்டை பிரபாகர்; பக்.232 ;
ரூ.100; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான நடையில், 40 தலைப்புகளில் அற்புதமான தகவல் பெட்டகமாக வந்திருக்கும் கட்டுரைகளின் நறுக்கான தொகுப்பு இந்நூல்.
ஆசிரியர்கள், சிறுவயதில் மாணவர்களை மரம் தன் வரலாறு கூறுதல் என்ற பாணியில் எளிதில் மனதில் பதியவைக்கும் முறையில் கட்டுரை எழுதச் சொல்வார்கள். அதே உத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு வாசகர்களின் மனதை அசைத்துப் பார்க்கும் சூட்சுமத்தை இந்நூல் மூலமாகச் செய்திருக்கிறார் நூலாசிரியர். நூலைக் கையில் எடுத்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடத் தோன்றுகிறது.
அலைபேசியில் தொடங்கி முகமூடியில் முடித்திருக்கிறார். எச்சரிக்கை என்ற தலைப்பில், எந்தவித நோயுமில்லாத 10 வயது சிறுவனுக்கு அன்னாசி பழம் விற்பவரால் வந்த எய்ட்ஸ் பற்றி கூறி நம்மை எச்சரிக்கிறார்.
கிரைம் நாவல் எழுதும் இவர்தானா மனதைக் கட்டிப் போடும் கட்டுரையாளர் என்பதை நம்பமுடியவில்லை. பொதுநலம், பேராசை, நன்றி, பொறாமை, கடன், காதல், முதியோர் இல்லம் போன்ற தலைப்புகளை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து, ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்நூலை அனைவரும் அலுப்புத் தட்டாமல் வாசிக்கலாம்.