இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும் - பா.கமலக்கண்ணன், பக்.368; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17. 044- 2431 0769.
அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றையும், அவர் அருளிய திருஅருட்பாக்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துகளையும் தாங்கிய விரிவான ஆய்வுப் புத்தகம் இது.
வள்ளலார் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள், அவரது சத்திய ஞான வாக்குகள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இராமலிங்கர் சென்னை, ஏழுகிணறு, வீராசாமிப் பிள்ளை தெருவில் பழைய கதவு எண் 39-இல் வசித்தது முதல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் உள்ள அறைக்குள் அமர்ந்து திருக்காப்பிட்டுக் கொண்டு, கதவை வெளிப்பக்கம் பூட்டிவிடுமாறு அணுக்கத் தொண்டர்களிடம் கட்டளையிட்டது வரை நம் மனக்கண் முன்னே இராமலிங்கரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
இராமலிங்கரின் திருவுருவம் கொண்ட பல அரிய புகைப்படங்கள், இராமலிங்கர் தங்கியிருந்த இடங்கள், அணுக்க சீடர்களுக்கு ஞானத் தவம் பயிற்றுவித்த மலைக் கோயில்கள், திருஅருட்பாவைக் காத்த ஆ.பாலகிருஷ்ணப் பிள்ளை, மாணிக்கவாசகர் அருளிய தமிழ்த் தாழிசை உள்ளிட்ட தகவல்கள் புதியவை.
இராமலிங்கர் அன்றைய சமயவாதிகளின் எதிர்ப்புகளைச் சகித்து ஞான தவம் புரிந்த சூழலையும், திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளிலும் விரவிக் கிடக்கும் அரிய கருத்துகளையும் நூலாசிரியர் புதிய கோணத்தில் அணுகி அழகுற வடித்துள்ளார்.