மனிதர் தேவர் நரகர் - பிரபஞ்சன்; பக்.256; ரூ.180; புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை-32; )044- 4596 9700.
அனுபவங்கள் எல்லாருக்கும் நிகழ்வதுதான். ஆனால் ஓர் எழுத்தாளனின் பார்வையிலேயே அவை துலக்கம் பெறுகின்றன. எழுத்தாளர் பிரபஞ்சன், தான் பார்த்த மனிதர்களைப் பற்றியும் தன்னைப் பாதித்த மனிதர்களைப் பற்றியும் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களைப் பற்றியும் எவ்வித அலங்காரப் பூச்சுமின்றி நேர்த்தியாக இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார்.
தனது ஊரைப் பற்றிய கட்டுரையில் தொடங்கி, அப்பாவைப் பற்றி, இசை கற்றது பற்றி, திரைப்பட அனுபவம் பற்றி, பத்திரிகை பணி பற்றி, பரிசுகள், சக எழுத்தாளர்கள், காதல் இப்படி எல்லாவற்றையும் குறித்து உயிரோட்டத்தோடு எழுதியிருக்கிறார்.
இத்தொகுப்பு வெறும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல், நாம் அறிந்த பலரைப் பற்றி நாம் அறியாத பல செய்திகளை நமக்கு அறியத் தருவனவாகவும் உள்ளன. (தி.ஜானகிராமன் "மோகமுள்' இரண்டாம் பாகம் எழுத விரும்பியது, "ஏக் தின் பிரதிதின்' படம் பற்றி இயக்குநர் மிருணாள்சென் கருத்து, ஒரு வண்டிக்காரனுடன் உ.வே.சா. நடத்திய உரையாடல் இப்படி)
கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ் போன்றவர்களுடனான பிரபஞ்சனின் அனுபவங்கள் மிகவும் ரசனைக்குரியவை.
ஒரு பிரபல வார இதழில் இவர் பணியில் சேர்ந்ததும் விலகியதும் (விலக்கப்பட்டதும்?) ஒரு சிறுகதைக்குரிய சுவையைத் தருகின்றன.
"என் வாகனம் சைக்கிள்' என்கிற தலைப்பு இரண்டாவதாக ஒரு கட்டுரைக்கு வைக்கப்பட்டிருப்பது பொருத்தமில்லாமல் இருக்கிறது.
அசல் உணர்ச்சிகள், எளிய சொல்லாடல்கள் இவற்றின் கலவையே இந்த "மனிதர் தேவர் நரகர்'.