அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம் - தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா; பக்.1864; ரூ.1500; ஓங்காரம், சென்னை-80; )044- 2687 2525.
காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டிருப்பதில் தொடங்கி, அவருடைய வேறு பெயர்கள், பூஜை முறைகள், வணங்க வேண்டிய நாள்கள், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கருப்பசாமி கோயில்கள் பற்றிய தகவல்கள் (அமைவிடம், கோயில் அமைப்பு, வழிபாடு விவரம்) இப்படி கருப்பசாமி குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கிய அருமையான தொகுப்பு இது. ஏராளமான படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
அழகர் கோயில் 18 ஆம் படி மற்றும் மானாமதுரை 18 ஆம் படி கருப்பசாமியின் அருட் செயல்கள் நம் நெஞ்சைத் தொடுகின்றன. வேலங்குடி உறங்காப்புளி கருப்பர் கீழச்சீவற்பட்டி ஆச்சியை திருடர்களிடமிருந்து காத்த சம்பவமும் விருத்தாசலம் அருகேயுள்ள கொடாரம் என்னும் ஊரில் சிறை மீட்ட கருப்பசாமி அவ்வூர் மக்களுக்காக நீதிமன்றம் வந்து சாட்சியளித்த சம்பவமும் வியப்பளிக்கக் கூடியவை.
கருப்பசாமியைப் பற்றி பாரதியார் முதல் பல்வேறு கவிஞர்கள் பாடிய பாடல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டிப் புலவர்கள் இரட்டையாசிரிய விருத்தமாக இயற்றிய பெரிய கருப்பண சுவாமி பதிகமும் ராங்கியம் கருப்பர் மீது பாடுவார் முத்தப்பர் பாடிய பதிகமும் காவியச் சுவைமிக்கவை. கருப்பசாமி குறித்து அ முதல் ஃ வரை அறிய உதவும் அரிய நூல் இது.