தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும் - இரா.சம்பத்; பக்.184; ரூ.120; முரண்களரி படைப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்ன சேக்காடு, மணலி, சென்னை-68.
தமிழ்க் கவிதை என்பது மிக நீண்டதொரு வரலாற்றுப் பழைமையினைக் கொண்டது. புதுக்கவிதையின் வகைமை, மரபுக் கவிதையியல் கோட்பாடு, இலக்கிய மரபு, கவிதை மரபு, இலக்கியவியல் நோக்கு, யாப்பியல் நோக்கு எனப் பன்முகப் பார்வையில், தொல்காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு, பாரதியார், தமிழ்நாடன், வானம்பாடிக் கவிஞர்கள் போன்றோரின் கவிதை மரபுகள் முதலியவை திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
இலக்கியவியல், யாப்பியல், மொழியியல் நோக்கில் எழுத்து ஆகியவை முதல் பகுதியிலும், பொருட்புலப்பாட்டு உறுப்புகளுள் ஒன்றான எச்சம், வகைமை ஆகியன இரண்டாம் பகுதியிலும், மகாகவி பாரதியார், கவிஞர்கள் தமிழ்நாடன், வானம்பாடிக் கவிஞர் ஆகியோரின் கவிதை மரபுகள் மூன்றாம் பகுதியிலும் - என மூன்று பகுதிகளாகப் பகுத்து ஆராயப்பட்டுள்ளன.
ஒரு முறைக்கு இருமுறை படித்தால் மட்டுமே இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள முடியும். கடினமான தலைப்பு; தலைப்புக்கேற்ற உள்கட்டமைப்பு; கடின உழைப்பு! காலத்தால் அழியாத பதிவு!