இராமாயண தத்துவ விளக்கங்கள் (இரண்டு பாகங்கள்) - பிரபோதரன் சுகுமார்; முதல் பாகம் பக்.208; ரூ.180; இரண்டாம் பாகம் பக்.528; ரூ.260; அயக்கிரிவா பதிப்பகம், சென்னை-5; )044 - 2844 4275.
அமரகவி இராமச்சந்திரா சித்தேஸ்வரர் 1906-1993 காலகட்டத்தில் வாழ்ந்தவர். நிஜானந்த போதம், தபசின் ரகசியம் என்னும் இரு (ஆங்கில) தெய்வீக நூல்களைப் படைத்துள்ளார்.
"இராம காவியத்தில் நாம் அறியக்கூடிய - உணரக்கூடிய ஆன்மிக தத்துவங்கள் மற்றும் விளக்கங்கள் எங்கு கிடைக்கும், எவ்வாறு புலப்படும் என்னும் வினாக்களுக்கு ஒரே விடை அமரகவி சித்தேஸ்வரர் கூறிய விளக்கங்களும் அவர் எழுதிய நிஜானந்த போதம் என்ற தெய்வீக நூலும்தான்' என்கிறார் சிறப்புரை வழங்கியுள்ள விபூதி அடிகளார்.
பிரபோதரன் சுகுமாரின் இந்த இராமாயணக் கதை சித்தேஸ்வரர் அளித்த விளங்கங்களுடன் யோக தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன.
முதல் பாகத்தில், ஜீவ-பிரம்ம ஐக்கியப் போராட்டத்தின் இரகசியமாக தசரதன் - ஜீவ சக்தியின் பிரதிநிதி, கெüசல்யா தேவி - சத்துவ குணம், சுமத்திரா - ரஜோ குணம், கைகேயி - தமோ குணம், கூனி - கர்ம வினைகள், ஸ்ரீராமன் - சித்த சொரூபன், லட்சுமணன் - மனம், பரதன் - புத்தி, சத்துருக்னன் - அகங்காரம், இராவணன் - பஞ்ச இந்திரியங்களின் ஆட்டம் எனவும், ஆறாதார சக்கரங்கள், பஞ்சகோச தத்துவம், பஞ்சாக்கினிகள், துவைத, அத்வைத, விசிஸ்டாத்வைத தத்துவங்கள் என முக்கிய கதாபாத்திரங்களின் மூலம் தத்துவ உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பாகத்தில், ஆத்ம சொரூபத்தில் ஜீவகதியின் பிரதிநிதி, திரிகுணமாயா, மூலப் பிரக்ருதி தத்துவம், கேசரி வித்யா, ஸ்ரீவித்யா உபாசனை, பிரம்ம நிஷ்டையின் அனுபவ காலம், காமாக்னியை வெற்றி கொள்ளுதல், அஷ்டமா சித்திகள், ஸ்தூல-சூட்சுமத்தின் இணைப்பு, மஹா குண்டலினி என நூல் முழுவதும் இதுவரை அறியப்படாத பல தத்துவங்கள் பொதிந்துள்ளன. இந்நூல் இராமாயணத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பிரம்ம சிருஷ்டியின் தத்துவ விளக்கங்களைக் கூறும் தத்துவக் கருவூலமாகத் திகழ்கிறது.