சாம்பவி யோகம் - பிரபோதரன் சுகுமார்; பக்.224; ரூ.120; அயக்கிரிவா பதிப்பகம், சென்னை-5; )044-2844 4275.
சம்பு என்பது சிவபெருமானின் திருநாமம். சம்புவின் மனைவி பெயர் சாம்பவி. யோக சாதனையில் மேலேறி வரும் யோகிகளுக்கு யோக சித்திகளை அளிக்கும் தெய்வமே சாம்பவி. ஸ்ரீ வித்யா யோக மார்க்கத்தில் சாம்பவி தேவதையின் உபாசனை முறைகளை சாம்பவி வித்யா என்கிறார்கள். சாம்பவி யோகம் என்ற இந்நூல் ஒரு ஞான நூல். யோகிகளுக்கான இந்தப் புத்தகத்தை சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறலாம். அமரகவி சித்தேஸ்வரர் சுவாமிகள் ஸ்ரீ வித்யா யோக மார்க்கத்தின் வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய்ந்து அதனை தமது சுய அனுபவத்தில் கண்டறிந்துள்ளார்.
எண்ணத்தை இரண்டு விநாடிகள் நிறுத்தி வைத்தாலே அதுவே மிகப் பெரிய யோக சாதனையாகும். சில விநாடிகளுக்கு மேல் எண்ணத்தை ஓய்வு கொள்ளச் செய்யும் சாதனைக்கு என்ன பெயர்? அதுதான் வேத காலத்தில் வாழ்ந்த பிரம்ம ஞானிகள் கையாண்ட பிரம்ம நிஷ்டை என்ற முறையாகும். பிரம்ம நிஷ்டையில் மட்டுமே எண்ணத்தை ஒரு சில நிமிடங்களுக்கு மேல் ஓய்வு கொள்ளச் செய்ய முடியும். தெய்வீக சித்த புருஷர் ராமசந்திரா (என்கிற) அமரகவி சித்தேஸ்வரர் வெளி உலக தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு, தனக்குள் ஐக்கியமாகி, தெய்வீகத்தின் சக்தியை உலகத்துக்கு வெளிப்படுத்திக் கொள்ளாமல் சாதாரண மக்களைப் போல் ஓர் எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது ஆன்மிக அனுபவங்களை புத்தக வடிவில் தாங்கி வந்திருக்கும் சாம்பவி யோகம் ஆன்மிக வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.