மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள் - எஸ்.குருபாதம்; பக்.384; ரூ. 250; மணிமேகலைப் பிரசுரம், சென்னை -17; )044- 2434 2926.
இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சமய மெய்யியல் என்ற ஆய்வுக் கருப்பொருளுக்காக இந்நூலை இலங்கை எழுத்தாளர் எஸ்.குருபாதம் எழுதியிருக்கிறார்; ஐந்து பாகங்களில் 67 அத்தியாயங்களில் மறுபிறப்பு, பூர்வஜென்ம நினைவுகள், மரணநிலை அனுபவங்கள், ஞானிகளின் கருத்துக்கள், உயிர்த்தெழல் குறித்த பல தகவல்களைத் தொகுத்திருக்கிறார்.
சமயவாதிகள் மட்டுமல்லாது, விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களையும் மறுபிறப்பு குறித்த கேள்வி திகைக்க வைத்துள்ளது. இதற்கான முடிவான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்பதே, உயிரின் அடுத்தகட்ட நிலை பற்றிய ஆய்வுகளைச் சுவாரசியமாக்குகிறது.
மனிதன் மட்டுமல்ல, ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எந்த உயிரின் வாழ்க்கையும் முடிவுற்ற பின் அடுத்த பிறவியை எடுக்கிறது என்பது கீழைமதங்களின் முக்கியமான தாத்பரியமாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை ஒரே நூலில் தொகுக்க முயன்றிருக்கிறார் இந்நூலாசிரியர்.
எளியநடையில், பரபரப்பான தகவல்களை எழுதியிருப்பினும் ஒரு தொடர்ச்சியை இந்நூலில் காணமுடியவில்லை. எந்த ஒரு முடிவையும் கூறாமல் வாசகரே அதைத் தீர்மானிக்க விட்டதாக ஆசிரியர் கூறினாலும், நூலின் தலைப்பிலுள்ள வியப்பை இந்நூல் அளிக்கவில்லை என்பது ஏமாற்றமே.
தவிர, இந்நூலில் பிரபலமான பலரது பெயர்கள் (உ.ம்: சிக்மன் பிஃரெயிட், சோக்கிரடீஸ், மிர்ரா, பைதோகோரஸ், மைத்ரேன்) தவறான உச்சரிப்புகளில் எழுதப்பட்டிருப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. நூலில் பரவலாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளும், தயாரிப்பில் இன்னும் சிரத்தை காட்டியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.