பாரதிதாசன் யாப்பியல் - ய. மணிகண்டன்; பக்.160; ரூ.120; சந்தியா பதிப்பகம், சென்னை - 83; 044-2489 6979.
எட்டயபுரத்துக் கவிஞரின் அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற, இரண்டாவது பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், படைப்புகளின் எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் பாரதியைவிட அதிக படைப்புகளைத் தந்தவர் அவர்.
ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, வண்ணம் என விதவிதமான யாப்பு வகைகளை தமது கவிதை இலக்கியங்களில் எழிலுறக் கையாண்டவர் அவர். மரபை அடியொற்றி மட்டுமின்றி, அதில் புதுமைகளைப் புகுத்தும் விதத்திலும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்பவும் பல்வேறு யாப்பு வகைகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளார்.
தமிழ் யாப்பு வடிவங்கள் பலவற்றை ஆற்றலுடன் ஆளும் திறம் பெற்ற பாரதிதாசனின் தனித்திறன், நுட்பங்கள் என அவரது கவிதை இலக்கியப் படைப்புகளில் உள்ள யாப்பியலை முழுமையாகவும், விரிவாகவும், நுட்பமாகவும் ஆராய்கிறார் இந் நூலாசிரியர்.
மேலும், யாப்பைப் பொறுத்தவரை புதியவர்களுக்கும், புரியாதவர்களுக்கும் தமிழில் உள்ள யாப்பு வகைகள், வடிவங்கள் எவை எவை, அவற்றை எப்படிக் கையாளுவது என அறிந்து கொள்ள மிக எளிய கையேடாகவும் இந் நூல் பயன்படும்.