அடை மழை- ராமலக்ஷ்மி; பக்.112; ரூ.100; அகநாழிகை பதிப்பகம், 33, மண்டபம் தெரு, மதுராந்தகம்-603 306.
தினமணி கதிர் உட்பட பல்வேறு இதழ்களில் வெளிவந்த 13 சிறுகதைகளின் தொகுப்பு. "வசந்தா' சிறுகதையில் வரும் வீட்டு வேலை செய்ய வரும் சிறுமியையும், பேப்பர் போடும் சிறுவனையும் நாம் அன்றாடம் சந்திக்க முடியும். "அடைக்கோழி' சிறுகதை, தள்ளாத வயதிலும்,கோழி வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் சரசுவைப் பற்றியும், அதை எதிர்க்கும் குடும்பத்தாரைப் பற்றியும் மிக இயல்பாக சித்திரிக்கிறது. "உலகம் அழகானது' சிறுகதையில், தனது மகளின் மருத்துவப் படிப்புக்காக அருகம்புல் சாறு விற்கும் ஒருவர், சக வியாபாரிகளால் விரட்டப்படுவதும், இதை எதிர்த்து வாடிக்கையாளர்கள் கூக்குரலிடுவதும், இறுதியில் சக வியாபாரிகள் ஒன்றிணைவதும் இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ, வயோதிக காலத்தில் மரங்கள், வண்ணப்பூக்கள் மலர்ந்து கிடக்கும் தன் கணவர் கட்டிய புதுச்சேரி வீட்டில் வாழும் மூதாட்டியைப் பற்றியது, "இதுவும் கடந்து போகும்' என்ற சிறுகதை. இவ்வாறு வாழ்க்கையை மிக இயல்பாக சித்திரிக்கும் கதைகளின் தொகுப்பு இந்நூல். நாம் அறியாத பல உலகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.