ம.கோ.களஞ்சியம் (பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் படைப்புகள்) - பதிப்பாசிரியர்: உஷா மகாதேவன்; பக்.816; ரூ.800; காவ்யா, சென்னை - 24; )044-2372 6882.
ம.கோபாலகிருஷ்ண ஐயரின் படைப்புகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார் அவரின் மகன் வழிப் பெயர்த்தி உஷா மகாதேவன். திருச்சி லால்குடியில் 1878இல் பிறந்த ம.கோபாலகிருஷ்ண ஐயர், 49 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், இலக்கிய வாழ்வாக வாழ்ந்தவர். மதுரை தமிழ்ச் சங்கத்தை பாண்டித்துரைத் தேவர் தொடங்கும் முன்னரே ம.கோ., மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் மதுரை வந்தபோது அவரை வரவேற்று வாழ்த்துக் கவி வாசித்தார். பாரதியாருக்கு உதவி, மதுரை பள்ளியில் அவர் பணி செய்யவும், அவர் சென்னையில் சுதேசமித்திரன் இதழில் பணியாற்றவும் பேருதவி புரிந்துள்ளார். பாஸ்கர சேதுபதி மன்னருடன் பாம்பன் சென்று சுவாமி விவேகானந்தரை வரவேற்றார். சுவாமி விவேகானந்தரின் பாடலை "சன்யாசி கீதம்' என மொழிபெயர்த்துள்ளார். இவரின் தனிப்பாடல்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் ஆகியவற்றை இந்த நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர். விசுவநாதன் அல்லது கடமை முரண் என்ற கவிதை நாடகம், மெüனதேசிகர் என்ற நகைச்சுவை நாடகம் இரண்டும் அக்காலத் தமிழுக்கும் மொழி நடைக்கும் சான்றாக அமைந்துள்ளன. இவர் நடத்தி வந்த நச்சினார்க்கினியன், விவேகோதயம் இலக்கிய இதழ்களில் இருந்தும் சில பக்கங்களை பழைமை மாறாமல் கொடுத்துள்ளார். ம.கோ.வின் வாழ்க்கை வரலாறும், பின்னிணைப்பாக அறிஞர் பெருமக்களின் உரைகளும் பலம் சேர்க்கின்றன. ம.கோ. குறித்து அறிந்து கொள்ள வேறெங்கும் தேடி அலையவேண்டாம், இந்த ஒரே ஒரு களஞ்சியம் போதும்.