மொழிபெயர்ப்புச் செம்மல் நா.தர்மராஜன் -80; பக்.240; ரூ.200; சர்வோதய இலக்கியப் பண்ணை, 32/1, மேல வெளி வீதி, மதுரை-625001.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்' என்றார் பாரதி. அந்தப் பணியை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு உழைத்து வருபவர் நா.தர்மராஜன். ""மூச்சுவிடுவது, சாப்பிடுவதைப் போல மொழிபெயர்ப்பும் ஓர் உடலியல் தேவை என்பதைப்போல - கடமை என்பதைப் போல எடுத்துக் கொண்டேன்'' என்று சொல்லும் அவர், பிற மொழிகளில் இருந்து தமிழுக்குக் கொண்டு சேர்த்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை நூறை நெருங்குகிறது.
டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற உலகப் புகழ்பெற்ற நாவல்கள், மார்க்சிய நூல்கள், சிறுவர் நூல்கள், இலக்கியக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் என தமிழ் அறிவுலகத்துக்கு அவர் பாய்ச்சிய ஒளி நம்மை வியக்க வைக்கிறது.
நா.தர்மராஜனின் நேர்காணல்கள், அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி பல்வேறு இதழ்களில் வெளிவந்த திறனாய்வுகள், அவருடன் பழகியவர்கள் அவரைப் பற்றிய எழுதிய கட்டுரைகள் என இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது.
""ஒரு முக்கியமான தமிழ் வாசகன் என்ற நிலையில் தர்மராஜனின் பெயரை நான் சாகித்திய அகாதெமியினரின் மொழிபெயர்ப்பு விருதிற்குச் சிபாரிசு செய்கிறேன்'' என்று எழுத்தாளர் சுந்தரராமசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.