சாவித்ரி - பா. தீனதயாளன்; பக்.208; ரூ.160; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 17; )044 - 2434 2771.
"நடிகையர் திலகம்' என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்பட்ட நடிகை சாவித்ரியின் திரையுலக வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சிறுவயதிலேயே பரதநாட்டியம், கதக், குச்சுப்புடி முதலிய நாட்டியங்களை முறையாகப் பயின்றவர் சாவித்ரி. என்.டி. ராமாராவ் நாயகனாக அறிமுகமான "பாதாள பைரவி'யில் முதன் முதலாக ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்க நேரமில்லை. அடுத்தடுத்து வெளியான "மனம்போல் மாங்கல்யம்', "சுகம் எங்கே', "மிஸ்ஸியம்மா', "மகேஸ்வரி', "மாதர்குல மாணிக்கம்' போன்ற எல்லாப் படங்களுமே வெற்றி. கண்ணதாசன் முதன்முதலில் தயாரித்த "இரத்தத் திலகம்' பட விளம்பங்களில் "நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் நடித்த' என்று விளம்பரப்படுத்தப்பட்டது. சாவித்ரிக்காகவே எம்.ஜி.ஆர். தனது "வேட்டைக்காரன்' படத்தில் நாயகியின் பாத்திரத்தை மாற்றியமைத்தார். 1957 - இல் வெளியான முப்பது தமிழ்ப்படங்களில் பத்து படங்கள் சாவித்ரி நடித்தவை. அன்று அது ஒரு சாதனை. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு முன்பாகவே சாவித்ரி மூன்று வேடங்களில் ("வணங்காமுடி') நடித்துவிட்டார். இப்படி உச்சத்திற்கு சென்ற சாவித்ரியின் வாழ்வு, சொந்தப்படத் தயாரிப்பு, இயக்கம் என்ற நிலை வந்தபோது வீழ்ச்சியடையத் தொடங்கியது. நம்பியவர்கள் கைவிட்டதால் நிலைகுலைந்து போனார். முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து கண்கலங்க, அரசின் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு கிடைத்தது. தனது இறுதிக்காலத்தில் நம்பமுடியாத அளவுக்கு வறுமையில் வாடியிருக்கிறார். தீய பழக்கங்களுக்கு ஆளானதால் பிறருடைய அனுதாபமும் இவருக்குக் கிட்டவில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசியைப்போல் வாழ்ந்து, ஆதரவற்றுப்போய் இறந்த சாவித்ரியின் வாழ்க்கை திரையுலகினருக்கு மட்டுமல்ல, பெண்ணினத்திற்கே ஓர் எச்சரிக்கை. அவர் நடித்த எந்தப் படத்தையும்விட திருப்பங்கள் அதிகம் நிறைந்தது அவர் வாழ்க்கை.