கிராம ஊராட்சி நிர்வாகம் - வடகரை செல்வராஜ்; பக்.344; ரூ.260, ரேவதி பப்ளிகேஷன்ஸ், புதிய எண் 76, பழைய எண் 27/1, பாரதீஸ்வரர் காலனி, 2-ஆவது தெரு, பவர் ஹவுஸ் அருகில், கோடம்பாக்கம், சென்னை-24.
அரசின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், பணிகளைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள், நிதி ஒதுக்கீட்டு முறை ஆகியவை குறித்த விவரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராமப் பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம். இது குறித்து இந்த நூல் அலசி ஆராய்கிறது.
ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரின் செயல்பாடுகள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் எளிய நடையில் விரிவாகத் தொகுத்துள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், புதுவாழ்வுத் திட்டம் போன்ற மாநில அரசின் திட்டங்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தூய்மை பாரத இயக்கம் - மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் இணைந்து தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுதல், தகவல் உரிமைச் சட்டம் 2015 போன்ற அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர், நேர்முக உதவியாளர் உள்ள கிராம ஊராட்சியின் முக்கிய அதிகாரிகளின் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவை நூலின் இறுதியில் அட்டவணை வடிவில் அளிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.