இனி இல்லை மரணபயம்... - உரையும் மொழிபெயர்ப்பும்: சந்தியா நடராஜன்; பக்.112; ரூ.100; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 -2489 6979.
உயிருள்ள அனைவருக்கும் உள்ளது மரண பயம். எனினும் மரணம் தவிர்க்க முடியாதது. இந்நூல் மரணத்தைப் பற்றி ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் முதற்கொண்டு இதிகாசங்கள், புராணங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், பகவத்கீதை, பைபிள், திருக்குர் ஆன் ஆகியவை கூறும் கருத்துகளைத் தொகுத்துத் தருகிறது. பட்டினத்தடிகள், லியோ டால்ஸ்டாய், ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, மகாத்மா காந்தி என உலகெங்கும் உள்ள சிந்தனையாளர்களின் கருத்துகளும் தரப்பட்டுள்ளன.
"இருந்து என்ன ஆகப் போகிறது? செத்துத் தொலைக்கலாம்... செத்து என்ன ஆகப் போகிறது? இருந்து தொலையலாம்' என்ற கல்யாண்ஜியின் கவிதை, "நான் சாகப் போவது இதற்காகத்தான் என்று ஒன்றை நீ கண்டடையவில்லை என்றால் நீ வாழத் தகுதியற்றவன் என்று சொல்லிக் கொள்கிறேன்' என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் கருத்து, "ஒரு மரணம் என்பது துயரம்... ஆயிரம் ஆயிரம் மரணங்கள் வெறும் புள்ளி விவரங்கள்' என்ற ஜோசப் ஸ்டாலின் கூற்று என மரணத்தைப் பற்றிய கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
எனினும், "நான் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? நான் உயிர் வாழ்கிறபோது மரணமும் இல்லை. மரணம் நேரும்போது நான் இருக்கப்போவதும் இல்லை. நான் வாழ்கிறபோது இல்லாத ஒன்றுக்காக நான் ஏன் அஞ்ச வேண்டும்?' என்ற எபிகுரஸின் கருத்தை நம் மனதில் விதைத்துவிடுவதுதான் இந்நூலின் சிறப்பு.