திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள் - தொகுதி -3 - பொன்.செல்லமுத்து; பக்.320; ரூ.250; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044- 2536 1039.
"சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம். ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றாம் தொகுதியில் 1979 இல் இருந்து 2001 வரை பாடல்கள் எழுதத் தொடங்கிய கவிஞர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு திரையிசைக் கவிஞர் எத்தனை படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது ஆண்டு வரிசைப்படியும் அகரவரிசைப் படியும் கூறப்பட்டுள்ளது. கவிஞரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு, அவர் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்களைப் பற்றிய விமர்சனரீதியான அலசல்கள் என நமக்குத் தெரியாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
எம்.ஜி.வல்லபன் தொடங்கி அறிவுமதி, பழநிபாரதி, பா.விஜய், தாமரை, நா.முத்துக்குமார் கபிலன், சிநேகன், யுகபாரதி உள்ளிட்ட 21 கவிஞர்களின் திரையிசைப் பாடல்களின் பயணம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் எழுதியதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பாடல்கள் பல அவரால் எழுதப்படவில்லை என்பதை இந்நூலின் மூலம் நமக்குத் தெரியவரும்போது வியப்பே மிஞ்சுகிறது.
வெறும் ஏழு படங்களுக்கு மட்டுமே பாடல் எழுதிய ஆபாவாணன் முதல் 100க்கும் அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதிய கவிஞர்கள் வரை எல்லாரையும் பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்களின் ஸ்டில்கள், பாடல்கள் பற்றிய தகவல்கள் அந்த திரைப்படங்கள் வெளிவந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.