மூளை என்னும் மூலவர் - பக்கவாதத்தையும் வெல்லலாம் - அ.வேணி; பக்.224; ரூ.220; சிவாவேணி பதிப்பகம், 57, கெளஸ்துபம், பாரதிநகர், 9 ஆவது குறுக்குச் சந்து, புத்தூர், திருச்சிராப்பள்ளி-17.
பக்கவாதம் என்றால் என்ன? அந்நோய் வருவதற்கான காரணங்கள் எவை? பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் எவை? பக்கவாத நோய் வராமல் தடுக்க, எதை உண்ண வேண்டும்? என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? குழந்தைகளுக்குப் பக்கவாதம் வருமா? பெண்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பது ஏன்? சுவாசிக்கும் காற்று, சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள் ஆகியவற்றால் பக்கவாதம் வருமா? பாரம்பரியத்தால் பக்கவாதம் வருமா? குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்திற்கும் பக்கவாதத்திற்கும் தொடர்புகள் உள்ளதா? பக்கவாதம் வந்துவிட்டால் செய்யக் கூடிய சிகிச்சைகள் எவை? சர்க்கரை நோய், தைராய்டு, அதிக கொழுப்பு சக்தி, அதிக உடல் எடை ஆகியவற்றால் பக்கவாத நோய் வர வாய்ப்புண்டா? தூக்கமின்மைக்கும் பக்கவாதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பன போன்ற பக்கவாதம் தொடர்பான பல ஐயங்களுக்கு, கேள்விகளுக்கு இந்நூல் மிக எளிமையாக, எல்லாரும் புரிந்து கொள்ளும்விதமாக விடையளிக்கிறது. நூலாசிரியர் மூளை நரம்பியல் நிபுணர் என்பதாலும் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவர் என்பதாலும் இவ்வளவு எளியமுறையில் இந்நூலை எழுத முடிந்திருக்கிறது. உடல் நலனைக் காக்க வழிகாட்டும் சிறந்த நூல்.