ஒரு துணைவேந்தரின் கதை
ஒரு துணைவேந்தரின் கதை - தன் வரலாறு- சே.சாதிக்; பாகம் 1; பக்.488; ரூ.400; பாகம் 2; பக்.448; ரூ.350; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; )044- 2834 3385.
1990 -93 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய நூலாசிரியரின் தன் வரலாற்று நூல் இது. முதல் பாகத்தில் அவருடைய இளமைக்காலம் சித்திரிக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவராக அவர் சேர்ந்ததுடன் முதல் பாகம் நிறைவு பெறுகிறது. இரண்டாம் பாகத்தில் பொறியியல் மாணவராக இருந்த அனுபவங்கள் அதன் பி றகு அவர் ஆசிரியப் பணியாற்றிய அனுபவங்கள் சித்திரிக்கப்படுகின்றன.
திருநெல்வேலி அருகே உள்ள பர்கிட் மாநகரம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்த நூலாசிரியர், அவருடைய இளமைக் காலம் முதல் அவர் பார்த்த உலகை, பெற்ற அனுபவங்களை, கற்ற நல்லறிவை, தெரிந்து கொண்ட விஷயங்களை எல்லாம் மிக எளிமையாக, சுவையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகம், அது பெற்ற பல்வேறு மாற்றங்கள், அவற்றைப் பற்றிய நூலாசிரியரின் பார்வை என இந்நூல் காட்டும் உலகு, வாசகர்களுக்குப் புதியது.
விளையாட்டைப் பற்றி, கல்வியைப் பற்றி, வாசிப்புப் பழக்கம் பற்றி, திருமணம் பற்றி, உறவுகளைப் பற்றி, மனிதர்களின் பழக்க, வழக்கங்கள் பற்றி என விரிகிற இந்நூல், வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவங்களைத் தரும் என்பது உறுதி. இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? எவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்? எவற்றை விட்டுவிட வேண்டும்? என்பன போன்றவற்றுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இந்நூல் இருக்கிறது.