சமரம் - வங்க மூலம்: தபோ விஜயகோஷ்; தமிழில்: ரவிச்சந்திரன் அரவிந்தன்; பக்.328; ரூ.200; சப்னா புக் ஹவுஸ், கோவை-2; 0422- 462 99 99.
மேற்கு வங்காளத்தில் 70 களின் சூழ்நிலையின் பின்னணியில் உருவான நாவல். தமால்ராய் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் கொலை செய்யப்படுவதுடன் தொடங்குகிறது இந்நாவல். அவரின் இறுதி ஊர்வலத்துடன் நிறைவடைகிறது. கொலைக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்கள், கொலை நடந்த பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் இடையில் சொல்லப்படு
கின்றன.
24 பர்கானா பகுதியில் இருந்த நிலச்சுவான்தார் மணிசங்கர் செüத்ரி அங்கு தனக்குத் சொந்தமாக இருந்த நிலங்களை விற்றுவிட்டு, நகர்ப்புறத்தில் பல தொழிற்சாலைகளை உருவாக்குகிறார். பஸ் கம்பெனியை நடத்துகிறார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அரசியல்வாதியாகவும் திகழ்கிறார்.
கிராமத்தில் இருக்கும்போது 1940 45 காலகட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, போராடிய விவசாயிகளை சுட்டுக் கொலை செய்த மணிசங்கர், நகர்புறத்தில் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கப் போராட்டங்களால் பாதிக்கப்படுகிறார். அவருடைய தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்டத்தால் அவர்களுடைய பல கோரிக்கைகளை வேண்டா வெறுப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டிய நிலை, பல சமயங்களில் தோல்விகளைச் சந்திக்க வேண்டிய நிலை அவரை முடக்கிப் போட்டுவிடுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முன்னணியில் நின்று செயல்பட்ட தமால்ராயைக் கொலை செய்யும்படி தனது மகன் ஜெயசங்கரிடம் கூறுகிறார். ஜெயசங்கர் கொலையும் செய்கிறார். ஆளும் வர்க்கத்தின் மனோபாவம், அவர்களை எதிர்த்துப் போராடுபவர்களின் உணர்வுகள் ஆகியவற்றை மிக அற்புதமாக இந்நாவல் சித்திரிக்கிறது.
மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, அவை செயல்படும்விதம், நக்சல்பாரிகள் தோன்றியது , அவர்களின் செயல்கள், நக்சல்பாரிகளைப் பற்றிய விமர்சனங்கள் என நாவல் முழுக்க அரசியல்தன்மையுடன் மிளிர்கிறது. மேற்கு
வங்காளத்தின் ஒரு காலகட்ட அரசியல் நிகழ்வுகளை, அவற்றுடன் தொடர்புடைய மக்களின் வாழ்க்கையை இந்நாவல் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.