காலம் உன்னையும் உலகத்தையும் படைத்தது - க.மணி; பக்.264; ரூ.200; அபயம் பப்ளிஷர்ஸ், 1153 -ஸ்ரீதுர்கா டவர்ஸ், சத்தி ரோடு, கணபதி, கோவை-641 006.
ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் "தி ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்கிற நூலை முன்மாதிரியாகக் கொண்டு தமிழில் படைக்கப்பட்ட நூல் இது. சூரியனை மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட பல கோள்கள் சுற்றி வருகின்றன. இந்த அகிலத்தின் தோற்றம் எப்படி ஏற்பட்டது? அதன், தன்மை குறித்து கி.மு.340 காலத்தில் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில், இந்திய விஞ்ஞானி பாஸ்கரா, தாலமி, நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, கெப்ளர், நியூட்டன் , ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல அறிவியலாளர்கள் கூறிய பல்வேறு கருத்துகளைஇந்நூல் தெளிவாக விளக்குகிறது. அகிலத்தில் உட்பொருள்களாகிய காலம், இடம், கேலக்ஸிகள், விசை ஆகியவை எவ்வாறு சார்புத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன என்பதை எளியமுறையில் இந்நூல் விளக்குகிறது.
அறிவியல்ரீதியாக அகிலத்தின் மூல விதிகள் விளக்கப்பட்டாலும், முதன்முதலில் அகிலம் ஏன் தோன்றியது, ஏன் இருக்கிறது என்பதையெல்லாம் அறிவியல்ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் நூலாசிரியர். அகிலம் இயங்குவதற்கான ஆதி மூலவிதிகள், அகிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டத்தையும், ஏன் இருக்க வேண்டும் இரகசியத்தையும் பெற்றிருந்தனவா? அந்த மூலவிதிகளின் ரகசியத்தில் கடவுள் ஒளிந்திருக்கிறாரா? அவரின் செயலினால்தான் அகிலம் இயங்கிக் கொண்டிருக்கிறதா? என்பன போன்ற கேள்விகளையும் நூல் எழுப்புகிறது. ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் கடவுளின் பங்கைப் பற்றி யோசித்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.