பட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறு கதைகள் - தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம், வை. கிருஷ்ணமூர்த்தி, விநாயகப்பெருமாள், எம்.பாலசுப்பிரமணியம், மா.நயினார், பா.ஆனந்தகுமார், மு.சதாசிவம், குறிஞ்சிவேலன், நிர்மால்யா; பக்.448; ரூ.340; சாகித்திய அகாதெமி, குணா
பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
2002 - இல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்
கழகமும், சாகித்திய அகாதெமியும் இணைந்து நடத்திய மொழிபெயர்ப்புப் பட்டறையில் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 43 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
மலையாள மண் மணக்கும் கதைகள் இத்தொகுப்பில் அதிகம் எனினும், இன்றைய நவீன மாற்றங்களில் வாழ்க்கை மண்ணைத் தாண்டியும் அதிக பொதுவெளிகளை உருவாக்கியுள்ளது. அந்தப் பொதுவெளியில் நிகழும் கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. வைக்கம் முகம்மது பஷீர், பொன்குன்னம் வர்க்கி, மலையாற்றூர் இராமகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன் நாயர், காக்க நாடன் உள்ளிட்ட புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர்களின் படைப்புகளை மொத்தமாக வாசிக்கக் கிடைப்பது அரிய அனுபவம்.
தான் வளர்க்கும் காளை மீது உயிரையே வைத்திருக்கும் ஒளசேப்பு அண்ணன், மகளின் திருமணத்துக்காக அதை விற்க நேர்கிறது. மகளுக்குத் துணி வாங்கச் செல்லும்போது அந்தக் காளை கசாப்புக் கடைக்குக் கொண்டு செல்லப்படுவதை அறிந்து மகளுக்குத் துணி வாங்காமல் காளையை வீட்டுக்கு அழைத்து வருகிறார் ஒளசேப்பு அண்ணன். என்றாலும் காளை இறந்துவிடுகிறது. ஒரு விவசாயியின் வாழ்வில் நிகழும் துன்பகரமான நிகழ்வுகளை கண்ணீரை வரவழைக்கும் விதத்தில் இயல்பாகச் சித்திரிக்கிறது பொன்குன்னம் வர்க்கியின் "ஒலிக்கும் கலப்பை' சிறுகதை.
மலையாற்றூர் இராமகிருஷ்ணனின் "பீட்டரின் லஞ்சம்' சிறுகதை, முதலமைச்சரின் தனிச்செயலர், தலைமைச் செயலர் போன்ற உயர்பதவிகளை வகிக்கும் இருவரின் பதவிக்கான - அதிகாரத்திற்கான போராட்டங்களைச் சித்திரிக்கிறது. இவ்வாறு மாறுபட்ட வாழ்க்கைகளை இயல்பாகச் சித்திரிக்கும் அருமையான சிறுகதைகள் அடங்கியுள்ள சிறந்த தொகுப்பு இந்நூல்.