சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி
சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி - சிவ. விவேகானந்தன்; பக்.301; ரூ.300; காவ்யா, சென்னை-24; 044-2372 6882.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த மதத்தின் அழியாத ஆவணங்களாக பல இடங்கள் திகழ்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது திருச்சாரணத்துமலை எனப்படும் சிதரால் ஆகும்.
சமண மதக் கல்வெட்டுகளும், சிற்பங்களும், ஆலயங்களும் காலஓட்டத்தில் சிதைந்தும், மாற்றமடைந்தும் வந்துள்ளதை அறிய முடிவதுடன், அவை பற்றிய புதிய புதிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
சமயவியல், கட்டடக் கலையியல், கல்வெட்டியல், சிற்பவியல் என பல்வேறு கோணங்களில் திருச்சாரணத்துமலை சமணப் பள்ளி வரலாற்றை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து, கட்டுரைகளாக்கியிருப்பதில் நூலாசிரியரின் கடின உழைப்பு தெரிகிறது.
ஆய்வுக்கு வலுசேர்க்கும் விதமாக சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்து மட்டுமன்றி, சூடாமணி, மதுரைக்காஞ்சி, திருவிளையாடற்புராணம் என பல இலக்கியங்களிலிருந்து பாடல் வரிகளை மேற்கோள் காட்டியிருப்பது பொருத்தமாக உள்ளது.
நூலின் இறுதியில் திருச்சாரணத்துமலை தொடர்பாக தனியாகத் தரப்பட்டுள்ள அரிய ஒளிப்படங்களின் தொகுப்பு, வரலாறு மற்றும் சமண மதம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு பொக்கிஷம்.
ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வே எழாத அளவுக்கு நாவலைப்போன்ற எழுத்து நடை ஈர்க்கிறது.