மாடித்தோட்டம் 77+ வயதினிலே - ஆர்.எஸ். நாராயணன்; பக்.168; ரூ.135 ; யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், 8, ஆறாவது குறுக்குத் தெரு, 8ஆவது முதன்மைச் சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், சென்னை-109.
இயற்கையான முறையில் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாமல் காய்கறிகள், கீரைகள், பழங்களை நமது வீட்டு மாடித்தோட்டத்தில் நாமே உருவாக்கிக் கொள்ள இந்நூல் உதவுகிறது.
இயற்கை விஞ்ஞானியாகிய நூலாசிரியர், மாடித்தோட்டம் அமைத்த தனது அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலைப் படைத்து
அளித்திருக்கிறார். மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு எழும் பல ஐயங்களுக்கு இந்நூல் விடை பகர்கிறது.
மாடித்தோட்டத்தில் எவற்றை எல்லாம் வளர்க்கலாம்? எவ்வளவு இடம் தேவை? மாடித்தோட்டம் அமைத்தால் வீட்டில் நீர்க்கசிவு ஏற்படுமா? கட்டடத்துக்கு அதனால் பாதிப்பு ஏற்படுமா? மாடித் தோட்டம் அமைக்க என்ன செய்ய வேண்டும்? என்ன உரங்களைப் பயன்படுத்த வேண்டும்? பஞ்சகவ்யம் என்றால் என்ன? அதை எப்படித் தயார் செய்வது? மாடித் தோட்டத்தில் வளரும் செடிகளுக்கு திரவ ஊட்டம் எவ்வாறு தருவது? மண்புழு வளர்ப்பினால் என்ன நன்மை? என்பன போன்ற பல ஐயங்களுக்கு இந்நூல் மிகத் தெளிவாக, நடைமுறை சார்ந்த விடைகளை அளிக்கிறது.
நூலாசிரியர் மாடித்தோட்டம் அமைத்தது குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள், மாடித்தோட்டம் அமைத்து வெற்றி கண்ட பலரின் அனுபவங்கள் இந்நூலில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.