மண் வாசனை - ஜ.பாரத்; பக்.150; ரூ.150; ஜீவா படைப்பகம், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை-42.
நூலாசிரியரின் இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளில் நனவோடை உத்தி கையாளப்பட்டுள்ளது. "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதைச் சுருங்கச் சொல்லும் "சொர்க்கவாசல்' கதையும், அளப்பரிய பாசத்தையும், சிக்கல்களையும் சொல்லும் "அசரீரி', "உறவுகள்'," மாயகிருஷ்ணன்' கதைகளும் கச்சிதம்.
சபாஷ் சந்திரபோஸூம், சே குவேராவும் சந்தித்ததாகக் காட்டப்படும் "நாடோடிப் புரட்சிக்காரன்' வித்தியாசமான படைப்பு. நேபாளம் வழியாக சூறையாடப்பட்ட ஆயுதங்களை வைத்து போஸ் தலைமையில் ஐ.என்.ஏ. படை பிரிட்டிஷ் அரசுடன் நடத்திய போரில் 25 ஆயிரம் வீரர்கள் இறந்தனர். இந்த உண்மைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதை இது.
தஞ்சையின் வாசம் நூலாசிரியரின் "மண் வாசனை' கதையில் வீசுகிறது. "சேது அலுவலகத்துக்குப் புறப்பட்டுவிட்டான். தஞ்சையின் நினைப்பு அதன் ஏக்கங்கள் ஒரு நொடிப் பொழுதில் காற்றில் கலந்தன. நகர வழ்க்கை அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க ஆரம்பித்தது' என்று எதார்த்தமாக முடிகிறது கதை.
உணர்வுகளின் தொகுப்பாக இருக்கிறது "நைவேத்தியம்' சிறுகதை.
இன்று நாம் இழந்து நிற்பது கூட்டுக் குடும்ப வாழ்வை. அதனை வலியுறுத்தும் நிறைய கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.